சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உபதலைவரும், தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி. விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியனின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (18) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள விஜயகுமார், இது ஒரு இலங்கையரின் உயிர் தொடர்பான விடயம் என்பதால் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அனோஜனின் குடும்பத்தினர் எதிர்கொண்டுள்ள நிலைமையையும் கருத்தில் கொண்டு, அவருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவதுடன், மரண தண்டனையைத் தவிர்ப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சவூதி அரேபிய அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்த விவகாரத்தில் சாத்தியமான மனிதாபிமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனோஜனின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் துயரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும் எனவும், இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வி. விஜயகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://samugammedia.com/immediate-action-is-needed-to-save-anojans-life–v-vijayakumar-1789785150
