Home இலங்கை அமைதியை இழந்து கறுப்புக் கொடிகளுடன் வீதிக்கிறங்கிய மக்கள்! பலாலியில் குழப்பம்

அமைதியை இழந்து கறுப்புக் கொடிகளுடன் வீதிக்கிறங்கிய மக்கள்! பலாலியில் குழப்பம்

0
image

யாழ்ப்பாணம் – வலி வடக்கு, பலாலி மக்கள் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் அமைதிவழிப் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி, இன்று (16) வீதியில் இறங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமது பூர்வீக காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவித்து, பலாலி மக்கள் தொடர்ச்சியாக பலாலிச் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 9ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த வாரம் அறிவித்திருந்தபடி போராட்டத்தின் வடிவத்தை மாற்றி மக்கள் வீதியில் இறங்கினர்.

இதன்படி, பலாலி செபஸ்ரியார் ஆலய  வீதியிலிருந்து கறுப்பு உடை அணிந்து, கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாகப் புறப்பட்ட போராட்டக்காரர்கள், பலாலிச் சந்தி வரை சென்றனர்.

பின்னர் பலாலிச் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச் சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போராட்டக் களத்தில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டது.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அமைதிவழியிலான தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்ததுடன், வழமையான போராட்ட நேரம் வரை போராட்டக் களத்தில் இருந்து தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Source: https://samugammedia.com/people-who-lost-their-calm-are-roaming-the-streets-with-black-flags-chaos-in-balali-1786876251

NO COMMENTS

Exit mobile version