Home இலங்கை இடிந்து விழும் அபாயத்தில் பழமையான இரும்புப் பாலம்; பரவிப்பாஞ்சான் மக்கள் போராட்டம்

இடிந்து விழும் அபாயத்தில் பழமையான இரும்புப் பாலம்; பரவிப்பாஞ்சான் மக்கள் போராட்டம்

0
image

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள பழமையான இரும்புப் பாலம் சேதமடைந்துள்ள நிலையில், அதனை உடனடியாக சீரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ-9 பிரதான வீதியிலிருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள குறித்த பாலம், 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாகவும், 1985ஆம் ஆண்டு சேதமடைந்த பின்னர் விடுதலைப் புலிகளால் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நீண்டகாலமாக மக்கள் பாவனையில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், பல்வேறு மக்கள் போராட்டங்களின் பின்னர் 2018ஆம் ஆண்டு கட்டம் கட்டமாக மீள மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பரவிப்பாஞ்சான் கிராமத்தின் வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது குறித்த இரும்புப் பாலத்தின் அடித்தளங்கள் பலவீனமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் காணப்படுவதாகவும், இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பாலத்தைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர் அச்சத்துடனேயே தினமும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக பாலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/old-iron-bridge-in-danger-of-collapsing-widespread-protests-by-the-villagers-1786099446

NO COMMENTS

Exit mobile version