இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் நிறையுள்ள கடல் அட்டைகள், மன்னார் சவுத்பார் பகுதியில் வைத்து இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து பல படகுகள் மூலம் கடல் அட்டைகள் இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன என்று கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தச் சட்டவிரோதக் கடத்தல் கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, கடத்தி வரப்பட்ட 13 படகுகளும், அதில் இருந்த 26 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை, உரிய ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கு ஏல அடிப்படையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை மற்றும் பொலிஸார் முன்னிலையில் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து இடம்பெற்று வரும் இவ்வாறான சட்டவிரோதக் கடல் அட்டைக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேடுதல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
