Home இலங்கை இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

0
image

அம்பாறை மாவட்டத்தின் இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் “மது” என்றழைக்கப்படும் பெண் ஒருவர் விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இங்ஹினியாகல பொலிஸாரும் இணைந்து செவ்வாய்க்கிழமை  மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சந்தேகநபரின் வசமிருந்து தலா 10 கிராம் அளவிலான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் கொழும்பிலிருந்து அம்பாறை பகுதிகளுக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோகித்து வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், அவருடைய கணவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் தற்போது விளக்கமறியலில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய எம். மதுஷானி திசாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும், அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்தியக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளின் மேற்பார்வையிலும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/woman-caught-based-on-a-tip-off-arrested-with-20-grams-of-narcotics-1785938544

NO COMMENTS

Exit mobile version