Home இலங்கை இரட்டை சம்பள மோசடி; கோட்டாவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

இரட்டை சம்பள மோசடி; கோட்டாவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

0
image

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவரை இன்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு குழுவினால், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இடம்பெற்ற பண மோசடி தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. 

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சுகீஸ்வர பண்டார 2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளதுடன், அதே காலப்பகுதியில் அன்றைய ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். 

அந்த விசாரணைகளின் விளைவாக, ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் அவர் இரண்டு பதவிகளுக்கான சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், இன்று (18) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபர் குறித்த பதவிகளை வகித்துக்கொண்டிருந்த போது, அரச வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அதன் ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பிலும் அந்தப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source: https://samugammedia.com/double-salary-scam-court-issues-swift-order-against-former-quota-secretary-1781790855

NO COMMENTS

Exit mobile version