கொழும்பு – ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கிவிட்டு காரில் தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகொட பொலிஸாரால் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (25) இரவு 11.30 மணி முதல் 11.57 மணி வரையான காலப்பகுதியில் ஹைலெவல் வீதியின் மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும், வட்டரக்க 20ஆம் கட்டை பகுதியிலும் குறித்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துகளுக்குப் பின்னர் காரில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மதுபோதைச் சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Source: https://samugammedia.com/oic-drunk-hit-two-women-with-a-car-and-fled-later-arrested-1785059780
