Home இலங்கை இலங்கைக்கு கடத்த முயன்ற 297 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது; 7...

இலங்கைக்கு கடத்த முயன்ற 297 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது; 7 பேருக்கு வலை

0
image

இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக வேனில் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 297 கிலோ கஞ்சாவை ராமநாதபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஏழு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, மெத்தம்பெட்டமைன் மற்றும் அதன் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மண்டபத்தை அடுத்த பிரப்பன்வலசை கடற்கரை நோக்கிச் சென்ற வேன் ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது வேனில் 145 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 297 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தினேஷ் மற்றும் களஞ்சியம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் ஏழு பேருக்கு இந்த கடத்தலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் காரணமாக, இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 297 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு பேரை தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. சந்தீஷ் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/297-kg-of-ganja-seized-while-trying-to-smuggle-to-sri-lanka–2-arrested-7-people-booked-1786185299

NO COMMENTS

Exit mobile version