நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல,
விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி ஆரம்பத்தில் ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணிகள் ட்ரோன் விமானங்கள் ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பயணிகள் ட்ரோன் போக்குவரத்து சேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள நிலையில், அந்த நாடுகளின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், இலங்கையின் எதிர்கால போக்குவரத்து முறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
