Home இலங்கை இலங்கையில் 24 சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களுக்கு அதிரடி தடை!

இலங்கையில் 24 சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களுக்கு அதிரடி தடை!

0
image

முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக இயங்கிவந்த 24 இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவை தளங்களை இலங்கைக்குள் உடனடியாக முடக்குவதற்குத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு  நடவடிக்கை எடுத்துள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஆணைக்குழுவே இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு அமையவே இந்த முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டபூர்வ உரிமங்களைப் பெறாமல், இலங்கைக்குள் ஒன்லைன் சூதாட்டச் சேவைகளை நடத்துவதும் விளம்பரப்படுத்துவதும் அச்சாசனத்தின் 44 ஆம் பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட 24 இணையத்தளங்களையும் இலங்கைக்குள் இருக்கும் பயனர்கள் அணுக முடியாதவாறு தடுக்குமாறு அனைத்துத் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கும் TRCSL நேரடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Source: https://samugammedia.com/crackdown-24-illegal-online-gambling-sites-banned-in-sri-lanka-1785943790

NO COMMENTS

Exit mobile version