Home இலங்கை இலங்கை சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துக! – சே.நல்லதம்பி கோரிக்கை!

இலங்கை சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துக! – சே.நல்லதம்பி கோரிக்கை!

0
image

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களின் உயிருக்கான உத்தரவாதங்களை இந்திய  இலங்கை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சே.நல்லதம்பி இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு ஈமெயில் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் முன்வைத்த கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகளில் இலங்கையின் பல சிறைகளிலும் தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள். இது இலங்கை சட்டதிட்டத்திற்கு உள்பட்ட விடயமாகினும் மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.   

கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் 30 பேர் உயிரிந்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் பின்பும் ஒன்றன் பின்பு ஒன்றாக இன்று பல சிறைகளிலும் வன்முறை பரவுவதாகவே இலங்கை செய்திகள் உள்ளது.

தற்போது கொழும்பு மெகசின் சிறை, குருவிட்ட மற்றும் பல்லன்சேனை சிறைகளில் இந்த வன்முறை வெடித்ததுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். எனவே இலங்கை சிறைகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

வன்முறை இடம்பெறும் சிறைச்சாலைகளிலும் இந்திய மீனவர்கள் இருக்ககூடும் என்ற அச்சம் தமிழக மீனவ குடும்பங்களில் பரவுகின்றது. எனவே இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் எமது ஐயத்தின் தன்மையை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் புரிந்துகொண்டு எமது மீனவர்களின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் இந்திய-இலங்கை அரசுகளே ஏற்க வேண்டும். ஏனெனில் இலங்கையில் இன்று நாட்டில் உள்ள அனைத்து சிறைகளினதும் பாதுகாப்பை உடன் பலப்படுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காற்றின் வேகத்தால் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் 11 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இதுபோன்று இலங்கை உள்ள பல்வேறு சிறைகளில் இந்திய மீனவர்கள் இருக்கிறார்கள்.

எனவே இந்த விஷயத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/ensure-the-safety-of-indian-fishermen-in-sri-lankan-prisons—c-nallathambis-appeal-1786182832

NO COMMENTS

Exit mobile version