மெல்சிரிபுரம் – ஓமரகொல்ல பகுதியில் ஊர்வலத் திருவிழாவிற்காக லொறியில் கொண்டு செல்லப்பட்ட யானை ஒன்று, டிப்பர் லொறி மோதியதில் படுகாயமடைந்துள்ளது.
மானம்பிட்டிய தேவாலயத்தின் வருடாந்த ஊர்வலத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, கேகாலை – ரந்தெனிய பகுதியில் இருந்து குறித்த யானை லொறியில் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யானையை ஏற்றிச் சென்ற லொறியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, யானையை வாகனத்திலிருந்து இறக்கி சாலையிலிருந்து அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, தம்புள்ளையிலிருந்து குருநாகலை நோக்கி பயணித்த மணல் டிப்பர் லொறி யானை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் லொறியில் மோதிய யானை சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் டிப்பர் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
