Home இலங்கை எங்களை அசைக்க முடியும் என எளிதாக எண்ணிவிட வேண்டாம்! அமைச்சர் சுசில் ரணசிங்க எச்சரிக்கை

எங்களை அசைக்க முடியும் என எளிதாக எண்ணிவிட வேண்டாம்! அமைச்சர் சுசில் ரணசிங்க எச்சரிக்கை

0
image

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் எங்களை அசைக்க முடியும் என யாரும் எளிதாக எண்ணிவிட வேண்டாம் என்று தேசிய மக்கள் சக்தியின் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், தங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரம் என்பது ஊழியர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுமக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுமே தவிர, எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படாது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். 

தங்களுக்கு எதிராக அரசியல் செய்யும் மாற்றுக்கட்சியின் தலைவர்கள் கூட ஊழியர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களிடம் எந்தவித அரசியல் பழிவாங்கல்களோ அல்லது அநீதிகளோ காட்டப்பட மாட்டாது, ஜனாதிபதி அவர்கள் பதவிப்பிரமாணம் செய்தபோது குறிப்பிட்டதை நினைவு கூர்ந்து, அதிகாரத்தை எந்த எல்லைக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு தங்களுக்கு இருப்பதாகக் கூறினார். 

இந்த அதிகாரம் தங்களது குடும்பத்தினரின், உறவினர்களின் அல்லது தனிப்பட்டவர்களின் நலன்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து கட்சியின் பலம் குறித்துப் பேசிய சுசில் ரணசிங்க, தங்களுக்குப் பின்னால் மிகச் சிறந்த தொழிற்சங்கக் கட்டமைப்பும், மாணவர் இயக்கங்களும் தளம் அமைத்துக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். 

அத்துடன் நாட்டின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் விவசாயிகளின் அமைப்புகளும், பெண்களின் பேராற்றல் மிக்க மகளிர் முன்னணியும் தங்களோடு பயணிப்பதுடன், நாடெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கும் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட வலுவானதொரு வலையமைப்பு தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளதாகக் குறிப்பிட்டார். 

அரசியல் களத்தில் தங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், தங்கள் தரப்பில் உள்ள தனி நபர்களை இலக்கு வைத்துத் தாக்கினாலும் அல்லது தாங்கள் பேசும் வார்த்தைகளைத் தவறாகக் கோடிட்டுக் காட்டி விமர்சித்தாலும் தங்களை வீழ்த்திவிட முடியாது என்றும், தாங்கள் விமர்சனங்களைத் தாங்கி, அவற்றுக்கு முகம்கொடுத்துப் பழகியவர்கள் என்றும் எச்சரித்தார். 

எனவே, அவதூறுகளையோ, விமர்சனங்களையோ முன்வைத்து தங்களைப் பின்வாங்கச் செய்யலாம் என யாரும் எளிதாக எண்ணிவிட வேண்டாம் எனக் கூறிய அவர், தங்களது அரசியல் என்பது தங்களின் சொந்த நலனுக்காக அன்றி, நாட்டின் எதிர்காலத்திற்காகவும், நாட்டின் பிள்ளைகளின் நலனுக்காகவும் மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டது என்பதை வலியுறுத்தித் தனது உரையை நிறைவு செய்தார்.

Source: https://samugammedia.com/do-not-easily-think-that-you-can-move-us-minister-susil-ranasinhas-warning-1780654769

NO COMMENTS

Exit mobile version