சுரேஷ் சலேயின் விடுதலையை வலியுறுத்தியும் அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பை வெளிப்படுத்தவுமான சத்தியாகிரக போராட்டம் இன்றைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது சுரேஷ் சலேயின் தாயாரும் கலந்து கொண்டு,
“எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள். நாட்டுக்காகவே அவரை நான் ஒப்படைத்தேன். ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக அவரை பலிகொடுக்க என்னால் முடியாது. மேலும், இனி எந்தத் தாய்மாரும் தங்களது பிள்ளைகளை இராணுவ சேவைக்காக அர்ப்பணிக்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் தன்னைப் போலவே போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் சுரேஷ் சலே அந்தத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பிலும் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
