Home இலங்கை என்னைச் சிறையிலடைக்க கோட்டாவுக்கு ஆலோசனை வழங்கியதே சுரேஷ் சலேதான்! – அம்பலப்படுத்திய பொன்சேகா

என்னைச் சிறையிலடைக்க கோட்டாவுக்கு ஆலோசனை வழங்கியதே சுரேஷ் சலேதான்! – அம்பலப்படுத்திய பொன்சேகா

0
image

“ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், எவ்வித நியாயமான காரணங்களுமின்றி என்னைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான அனைத்துச் சூழ்ச்சித் திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியது இதே சுரேஷ் சலேதான்” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடும் போதே அவர் தனக்கு நேர்ந்த கடந்த கால அரசியல் பழிவாங்கல்களின் பின்னணியை இவ்வாறு அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஒரு மதுப் போத்தலுக்கும், சோற்றுப் பார்சலுக்கும் மற்றும் வெறும் ஆயிரம் ரூபா பணத்துக்கும் ஆசைப்பட்டு, சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்திகளைப் பரப்பி, இன்றும் ராஜபக்ஷக்களுக்கும் அவர்களின் சகாக்களுக்கும் முட்டுக்கொடுக்கும் நபர்கள் குறித்து நான் பரிதாபப்படுகின்றேன். கடந்த காலத்தில் எனக்கு இழைக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்களின் உண்மையான சூத்திரதாரிகள் இவர்கள்தான் என்பதை நாடு அறிந்துகொள்ள வேண்டும்.

ராஜபக்ஷ அரசிடம் நான் எவ்வித குற்றச்சாட்டுகளோ அல்லது முறையான சிவில் நீதிமன்ற விசாரணைகளோ இன்றி, கடற்படைத் தலைமையகத்தில் உள்ள விசேட முகாம் ஒன்றில் சுமார் 8 மாதங்கள் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் தடித்த பலகைகளால் முழுமையாக அடைக்கப்பட்ட, வெளிச்சமோ காற்றோ வராத ஒரு சிறிய அறையிலேயே நான் மிருகத்தனமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தேன்.

எனவே, சிறைச்சாலைகள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள், தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்கப்பட்டு இருப்பவர்களின் வேதனை மற்றும் அனுபவங்கள் என்ன என்பது குறித்த முழுமையான அறிவும் அனுபவமும் இந்த சுரேஷ் சலேவுக்கு மிக நன்றாகவே உண்டு.

இந்த சுரேஷ் சலே மற்றும் கபில ஹெந்தவிதாரண போன்ற பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரிகளின் முறையற்ற ஆலோசனைகளையும், நச்சு வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷ அன்று என்னைச் சிறையிலடைத்துப் பழிவாங்கினார்.

இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகள் என் மீது மட்டுமன்றி, எவ்வித அரசியல் தொடர்புமற்ற எனது குடும்பத்தினர் மீதும் திட்டமிட்டு அரச அதிகாரப் பலத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்டது. நான் பழிவாங்கப்பட்டு இராணுவக் காவலில் கைது செய்யப்பட்ட அந்தத் துயரமான தினமன்று, எனது மனைவியைக் கூடக் காலை 4 மணி வரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கொடூரமான முறையில் தடுத்து வைத்து, கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.” – என்றார்.

Source: https://samugammedia.com/it-was-suresh-salethan-who-advised-kottai-to-imprison-me—stunned-ponsheka-1781015519

NO COMMENTS

Exit mobile version