நாட்டில் எலிக் காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலிகளின் சிறுநீரில் காணப்படும் பக்டீரியாவினால் இந்த நோய் பரவுவதாக தெரிவித்தார்.
நாட்டில் பரவலாகக் காணப்படும் தொற்று நோய்களில் ஒன்றான எலிக் காய்ச்சல், முறையான சிகிச்சை தாமதமானால் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகள், சேறு நிறைந்த பகுதிகளில் பணிபுரிபவர்கள், வடிகால் சுத்திகரிப்பு பணியாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்வெளிகள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் அதிக ஆபத்துக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், தேங்கி நிற்கும் நீர், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், சேறு நிறைந்த சூழலில் பணிபுரிபவர்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் உரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண் வலி ஆகியவை எலிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்வதையோ அல்லது சிகிச்சையை தாமதப்படுத்துவதையோ தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
