புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வளைவடி குறிச்சிக்காடு பகுதி முதல் கண்ணகை அம்மன் ஆலயம் நோக்கிச் செல்லும் சுமார் 350 மீட்டர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வீதி மின்விளக்குகள் மற்றும் வழிகாட்டி விளம்பரப் பதாகைகள் என்பன நேற்றிரவு சில சமூக விரோதிகளால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பல அமைப்புகள் மற்றும் புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்போடும் உழைப்போடும் உருவாக்கப்பட்ட இத்திட்டங்கள்,சில நொடிகளிலேயே விசமிகளால் அழித்தொழிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கனடா ஆலடி உறவுகளினால் சில தினங்களுக்கு முன்னர், வளைவிலிருந்து குறிச்சிக்காடு வரை பொருத்தப்பட்ட 6 மின்கம்பங்களின் மின்விளக்குகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
‘தாயகம்’ அமைப்பு , ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் ‘சாய் டிரேடர்ஸ்’ இணைந்து நிறுவிய, புங்குடுதீவு சுற்றுலாத் தலங்களைக் காட்சிப்படுத்தும் விளம்பரப் பதாகை கிழித்தெறியப்பட்டுள்ளது.
பிரதேச சபை மற்றும் சுற்றுலாத் திணைக்களத்தால் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு வழிகாட்டும் வகையில் வைக்கப்பட்டிருந்த பலகை உடைக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பதாதைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா மற்றும் விழாப் பதாகைகள் வைக்கப்பட்டு பல மாதங்களாக எந்தவித சேதமும் இன்றி இருந்த நிலையில், ஆலடி உறவுகள் மின்விளக்குகளைப் பொருத்திய சில நாட்களிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
இதனால், மின்விளக்குகளை உடைக்கும் சாக்கில் பதாகைகளையும் திட்டமிட்டுச் சேதப்படுத்தினார்களா?
அல்லது தனிப்பட்ட போட்டாபோட்டியா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? என்ற கோணத்தில் அப்பகுதி மக்கள் பலரும் சந்தேகங்களை எழுப்பி அங்கலாய்த்து வருகின்றனர்.
பலரின் கடுமுழைப்பில் உருவான இத்திட்டங்களைச் சீரழித்த இந்த நாசகாரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது என்றும், இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை மற்றும் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
