Home இலங்கை எல்-நினோ எச்சரிக்கை; இலங்கையில் வறட்சி அபாயம்! உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

எல்-நினோ எச்சரிக்கை; இலங்கையில் வறட்சி அபாயம்! உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

0
image

ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் உருவாகக்கூடிய மிக வலுவான எல்-நினோ (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் எதிர்வரும் மாதங்களில் உலகளாவிய அளவில் உணரப்படலாம் என ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் தாக்கமாக ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இலங்கையில் வறண்ட காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உள்நாட்டு வானிலை அவதானிப்பு திணைக்களமும் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை வழமையை விட அதிகரிப்பதன் விளைவாக உருவாகும் இயற்கை காலநிலை நிகழ்வே எல்-நினோ என அழைக்கப்படுகிறது. இது உலகளாவிய வானிலை அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், கிழக்கிலிருந்து வீசும் காற்றோட்டங்களையும் வெப்ப அலைகளையும் ஆசியப் பிராந்தியத்தை நோக்கித் திருப்புகிறது.

இதனால் இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வழமையான மழைவீழ்ச்சி குறைவடைந்து கடுமையான வறட்சி நிலை உருவாகக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

அதேவேளை, பசிபிக் பெருங்கடலை ஒட்டிய வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அதிக மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜூன் முதல் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எல்-நினோ நிலைமை உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு கணித்துள்ளதுடன், அதன் தாக்கம் நவம்பர் மாதம் வரை நீடிக்கக்கூடும் என அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை, இதன் விளைவுகள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையிலும் தொடரக்கூடும் என காலநிலை ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எல்-நினோவின் தாக்கம் வானிலை மாற்றங்களுடன் மட்டுப்படாது என்றும், 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆசியா முழுவதும் விவசாய உற்பத்தி மற்றும் உணவு விநியோகச் சங்கிலிகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே சர்வதேச நெருக்கடிகள், உரத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக சவால்களை எதிர்கொண்டு வரும் விவசாயத் துறைக்கு, எல்-நினோவால் ஏற்படக்கூடிய வறட்சி மேலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/el-nio-warning-drought-risk-in-sri-lanka-threat-to-food-security-1780501520

NO COMMENTS

Exit mobile version