Home இலங்கை ஏழு ஆண்டுகளில் 4,308 பொலிஸார் சேவையிலிருந்து விலகல்; 30,815 பதவிகள் வெற்றிடம்

ஏழு ஆண்டுகளில் 4,308 பொலிஸார் சேவையிலிருந்து விலகல்; 30,815 பதவிகள் வெற்றிடம்

0
image

2020ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதி வரையிலான சுமார் ஏழு ஆண்டுகள் காலப்பகுதியில் பல்வேறு காரணங்களால் 4,308 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சேவையிலிருந்து விலகியவர்களில் 3,936 ஆண் அதிகாரிகளும் 372 பெண் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் கடந்த 2025ஆம் ஆண்டிலேயே சேவையிலிருந்து விலகியுள்ளனர். அந்த ஆண்டில் மாத்திரம் 838 ஆண் அதிகாரிகளும் 49 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 887 பேர் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 699 ஆண் அதிகாரிகளும் 59 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 758 அதிகாரிகள் சேவையை விட்டு விலகியுள்ளனர்.

சேவைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஓய்வு பெறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் சேவை இடைவிலகலுக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுதவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸ் உத்தரவுகளுக்கு முரணாகச் செயற்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் 658 அதிகாரிகளை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 30,815 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதில் சாதாரண பொலிஸ் சேவையில் 28,164 வெற்றிடங்களும், விசேட அதிரடிப்படையில் 2,651 வெற்றிடங்களும் உள்ளன.

எவ்வாறாயினும், உரிய ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்ற நடைமுறைகளுக்கு அமைவாக இந்த வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பொலிஸ் அதிகாரிகளின் செயல்திறனை அதிகரிப்பதற்கும் அவர்களின் மனநலனை உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு நலன்புரித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், அறுவை சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்தல், ஆலோசனை மற்றும் உளவியல் திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

மேலும், ‘பொலிஸ்மா அதிபர் நிவாரண தினம்’ ஊடாக பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக பொலிஸ்மா அதிபரைச் சந்தித்து தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/in-seven-years-4308-police-officers-left-the-service-30815-positions-are-vacant-1786942452

NO COMMENTS

Exit mobile version