கற்பிட்டி, கண்டல்குழி பகுதியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் இருந்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் அடங்கிய கைப்பை பலவந்தமாகப் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியின் பஜெட் (Paget) நகரைச் சேர்ந்த சாகனெல்லி மத்தியா (Zaganell Mattia) என்ற சுற்றுலாப் பயணியே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
அவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி சுற்றுலா நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், செப்டெம்பர் 17ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கற்பிட்டி பகுதிக்கு சென்ற அவர், கண்டல்குழி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில் கண்டல்குழி கடற்கரையில் தனியாக நடமாடிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் அவரது கைப்பையை பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறித்துச் செல்லப்பட்ட கைப்பைக்குள் சுமார் 1,000 யூரோ பெறுமதியான உயர்தர கைக்கடிகாரம், 10,000 ரூபாய் பணம், மூக்குக் கண்ணாடி மற்றும் சுற்றுலா வழிகாட்டி கையேடு உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணியின் முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய மர்ம நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
