புத்தளம் மாவட்டத்தின் உடப்பு மற்றும் கல்பிட்டி பகுதிகளில் கடுமையாக வீசிவரும் தென்மேல் பருவக்காற்றின் தாக்கத்தால் கடலரிப்பு வேகமடைந்துள்ளதுடன், பல மீனவ வாடிகளும் கடற்கரையோர குடியிருப்புகளும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளன.
உடப்பு பகுதியில் நேற்று (02) இரவு கடலலைகள் கரையைத் தாண்டி மீனவ வாடிகளுக்கு அண்மையிலுள்ள வீதிவரை வந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பல மீனவ வாடிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, கல்பிட்டிக்கு வடக்கே அமைந்துள்ள கீரிமுந்தல் மீனவ கிராமமும் கடுமையான கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக டஜ்பே கிராமிய மீனவர் அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலானோரின் ஒரே வாழ்வாதாரம் மீன்பிடித் தொழிலாகும்.
கடற்கரை அரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம மக்கள் மற்றும் மீனவ அமைப்புகள் இணைந்து முன்னதாக மணல் மூடைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த போதிலும், அண்மைய நாட்களில் வீசிவரும் பலத்த காற்று மற்றும் கொந்தளிக்கும் கடல் காரணமாக அவையும் கடலுக்குள் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கீரிமுந்தல் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடிப் படகுகளும் கடும் காற்றின் தாக்கத்தால் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலைமைக்கு உடனடி தீர்வு காணப்படாவிட்டால், கீரிமுந்தல் கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து மறைந்து போகும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மீனவர் ஒருவர், “பருவக்காற்று காலங்களில் கடல் கொந்தளிப்பது எங்களுக்கு புதிதல்ல. ஆனால் இந்த முறை அசாதாரணமாக கடல் சீற்றமடைந்துள்ளது. கடற்கரை எங்கள் வாழ்வாதாரத்தின் அடிப்படை. படகுகளை நிறுத்தவும், மீனவ வாடிகளை நடத்தவும் அதுவே அவசியம். கடற்கரை முழுமையாக அரிந்துவிட்டால் எங்களால் தொழில் செய்ய முடியாது. எனவே எங்கள் கடற்கரையை பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.
