திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுவதுடன், கால்நடைகளும் நீர் மற்றும் உணவின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தோப்பூர் பிரதேசத்தில் உள்ள பம்மான்குளம், உல்லைக்குளம், கீரான்குளம், இத்திக்குளம் உள்ளிட்ட பல குளங்கள் நீரின்றி வற்றிய நிலையில் காணப்படுகின்றன.
அத்துடன், அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களும் கடுமையான வெயில் காரணமாக கருகி காணப்படுவதால், கால்நடைகளுக்கான இயற்கையான உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நீர் மற்றும் உணவைத் தேடி அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தோப்பூர் பிரதேசத்தில் இம்முறை கடும் வரட்சி நிலவி வருவதாகவும், கால்நடைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
