Home இலங்கை கட்டுநாயக்கவில் பெரும் சுங்க வேட்டை; ஆபத்தான பொருட்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்

கட்டுநாயக்கவில் பெரும் சுங்க வேட்டை; ஆபத்தான பொருட்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்

0
image

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய இச்சந்தேகநபர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து எயார் ஏஷியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளைக் கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 60 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் “பச்சை வழி” ஊடாக எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’  போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், நேற்று (25) மாலை கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணவகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 36,200 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் பயன்படுத்திய கெப் ரக வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய மலேசியப் பிரஜை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்துள்ள கொம்பனித்தெரு பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/big-customs-hunt-in-katunayake-foreigners-caught-with-dangerous-items-1785043657

NO COMMENTS

Exit mobile version