கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கம்பிக்கூடுகள் மற்றும் நைலான் வலைகளை கந்தளாய் பொலிஸார் நேற்று (20) மாலை மீட்டுள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 22 கம்பிக்கூடுகளும், 160 மீற்றர் நீளமான நைலான் வலைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/illegal-fishing-gear-recovered-from-kandhalai-pond-two-escape-1787295145
