மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவு பகுதிகளில் பல வாரங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, தேசிய நீர்மின் சக்தி அமைப்பிற்குச் சொந்தமான மவுசாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் வழங்கிய தகவலின்படி,
இன்று (08) காலை 8.00 மணி நிலவரப்படி மவுசாகலை நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்புவதற்கு, மேலும் 18 அடியும், காசல்ரீ நீர்த்தேக்கம் நிரம்புவதற்கு மேலும் 12 அடியும் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக மத்திய மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீர்மின் நிலையங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை பெய்யாததால், இந்த இரு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சுமார் 50 சதவீதம் வரை குறைந்த நிலையில் காணப்பட்டிருந்தது.
மவுசாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்கள், தேசிய மின்வலையமைப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் லக்ஷபானா, நியூ லக்ஷபானா, பொல்பிட்டியா, விமலசுரேந்திரா, கென்யோன் மற்றும் போர்டுலேண்ட் நீர்மின் நிலையங்களுக்கான பிரதான நீர் சேமிப்பு ஆதாரங்களாக விளங்குகின்றன.
தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், அங்குள்ள நீர்மட்டம் மேலும் வேகமாக உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
