Home இலங்கை கல்முனை கடற்கரைப் பூங்கா நவீனமயமாக்கல் ஆரம்பகட்டப் பணிகள் ஆரம்பம்

கல்முனை கடற்கரைப் பூங்கா நவீனமயமாக்கல் ஆரம்பகட்டப் பணிகள் ஆரம்பம்

0
image

கல்முனை பிராந்தியத்தின் மிக முக்கியப் பொது இடமான கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பிரம்மாண்டத் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

முன்மொழியப்பட்டுள்ள இப் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், பூங்கா வளாகத்தைச் சுத்தப்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக நிலத்தை மட்டப்படுத்துதல் உள்ளிட்ட பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் வழிகாட்டலில், பொறியியலாளர் ஹலீம் எஸ். மொஹமட் அவர்களின் நேரடி மேற்பார்வையில் இப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இப் பணிகளில் பிரஜா சக்தித் தலைவர்களான சஜாத், பைரூஸ், நவாஸ் ஆகியோருடன் நஜீம், சுஜான் மற்றும் அனஸ் உள்ளிட்டப் பலரும் நேரில் கலந்துகொண்டு தமது பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கினர்.

கல்முனை பிரதேச மக்களுக்கும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் சுத்தமான, பாதுகாப்பான மற்றும் எழில்மிகு பொது இடமாக இப் பூங்காவை மாற்றுவதற்கான முதற்கட்டப் படியாக இச் செயற்பாடு அமைகின்றது.

இத் திட்டத்தினூடாகப் பொழுதுபோக்கு, சமூக நிகழ்வுகள், சுற்றுலா மற்றும் உள்ளூர் வணிகப் பொருளாதார வாய்ப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதோடு, கடற்கரைப் பூங்காவின் தோற்றத்தையும் பயன்பாட்டையும் மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://samugammedia.com/kalmunai-beach-park-modernization-initial-works-begin-1789723923

NO COMMENTS

Exit mobile version