மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13.07.2026) இரவு, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின் போது குறித்த உணவகம் அடையாளம் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் இன்று (15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், உணவகத்தில் காணப்படும் அனைத்து சுகாதார குறைபாடுகளும் சீர்செய்யப்படும் வரை அதனை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகம் சீல் வைத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
