Home இலங்கை காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகில் திடீர் தீ – பாரிய அனர்த்தம் தவிர்ப்பு

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகில் திடீர் தீ – பாரிய அனர்த்தம் தவிர்ப்பு

0
image

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென தீ பரவிய நிலையில், கடற்படையினர் மற்றும் பெற்றோலிய அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்தைச் சூழவுள்ள வெற்றுக்காணிகள் நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்படுவதுடன், அவற்றில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணிகளின் நிலைமை தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்டமை தொடர்பிலும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என எச்சரிக்கும் பதாகைகளை காட்சிப்படுத்துமாறு காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரியிடம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக எழுத்துமூலமான கோரிக்கை கடிதம் அனுப்புமாறு அவர் கோரியதாகவும் கூறப்படுகிறது.

காங்கேசன்துறையில் எரிபொருள் களஞ்சியசாலை நிறுவப்பட்டபோது, அதனைச் சூழவுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், தற்போது எரிபொருள் களஞ்சியசாலையைச் சுற்றி கம்பி வேலிகள் மாத்திரமே காணப்படுவதுடன், இன்று தீ பரவிய வெற்றுக்காணிக்கு அருகிலேயே எரிபொருள் தாங்கிகளும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாகவும் அயலவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால், எரிபொருள் களஞ்சியசாலையைச் சுற்றி உயரமான பாதுகாப்பு மதில்களை அமைத்து, அதனை பாதுகாப்பான களஞ்சியசாலையாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அயலவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அயலவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவனாந்தரசாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து, குறித்த பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/sudden-fire-near-kangesanthurai-fuel-depot—massive-disaster-avoided-1785146732

NO COMMENTS

Exit mobile version