நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் தற்போது நிலவிவரும் மழை உடனான வானிலை, மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின்னரே இம்மழைப்பொழிவு படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ஸ்ரீமால் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை தாக்கமானது, அடுத்த ஆண்டின் வடகிழக்கு பருவக்காற்று காலம் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்காரணமாக, தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மேலும் கடுமையான காலநிலையை எதிர்கொள்ளக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ச்சியான வறட்சி காரணமாகக் காற்றின் வேகம் குறைய வாய்ப்புள்ளதாகவும், இதனால் வளிமண்டல ஈரப்பதத்துடன் இணைந்து உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு மீண்டும் கணிசமாக உயரக்கூடும் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
