Home இலங்கை காலியில் கரையொதுங்கிய வெற்று கொள்கலன்! மீனவர்களுக்கு எச்சரிக்கை

காலியில் கரையொதுங்கிய வெற்று கொள்கலன்! மீனவர்களுக்கு எச்சரிக்கை

0
image

காலி மாவட்டத்தின் இந்துருவ பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றின் பின்புறக் கடற்கரையில் வெள்ளை நிற சரக்குக் கொள்கலன் ஒன்று இன்று (02) காலை கரையொதுங்கியுள்ளது.

நேற்று கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து கடலில் விழுந்ததாகக் கூறப்படும் வெற்று சரக்குக் கொள்கலன்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கொஸ்கொட பொலிஸார் கடல்சார் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளதுடன், கரையொதுங்கிய கொள்கலன் குறித்து மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் பயணித்த வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 காலி சரக்குக் கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போதைய கடல் நீரோட்டத்தின் வேகம் மற்றும் திசை காரணமாக, கடலில் மிதக்கும் இந்தக் கொள்கலன்கள் நீர்கொழும்பு வழியாக பெருவளை முதல் புத்தளம் வரையிலான கடற்கரைப் பகுதிகளை நோக்கி அடித்துச் செல்லப்படலாம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், குறித்த கடற்பரப்பில் இயங்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் சிறிய அளவிலான மீன்பிடிப் படகுகள் கடலில் பயணிக்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், மிதக்கும் கொள்கலன்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் கடலுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/an-empty-pot-clattering-on-the-shore-a-warning-to-fishermen-1785666461

NO COMMENTS

Exit mobile version