மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை சுமார் 8 அடி நீளமான ராட்சத முதலை ஒன்று புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
குடியிருப்பு பகுதிக்குள் முதலை நுழைந்ததை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளின் பின்னர் முதலையை உயிருடன் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வாகனத்தின் மூலம், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் முதலை பாதுகாப்பான இயற்கை வாழிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்ச நிலை ஏற்பட்டிருந்த போதிலும், அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் எவ்வித உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
