யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, துன்னாலை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கொடூர தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒரே ஊரைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையின் தொடர்ச்சியாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த நபரை நால்வர் கொண்ட குழுவினர் நேற்றிரவு பின்தொடர்ந்து சென்றதாகவும், ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூரமான தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நால்வரும் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
