கேகாலை நகரில் கொழும்பு வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
இரத்தப் பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தமை, காலாவதியான மருத்துவப் பரிசோதனை இரசாயனங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது, முழு இரத்தப் பரிசோதனைக்கு (FBC) கட்டுப்படுத்தப்பட்ட விலையான 400 ரூபாவுக்குப் பதிலாக 500 ரூபா வசூலித்தமை கண்டறியப்பட்டது.
மேலும், வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 20 பொதிகள் காலாவதியான HCV Rapid Test Cassettes மற்றும் மருத்துவப் பகுப்பாய்வு கருவிகளில் பயன்படுத்தப்படும் காலாவதியான இரசாயனங்கள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், வைத்தியசாலை மருந்தகத்தில் விற்பனைக்காக 23 பொதிகள் காலாவதியான ஒருமுறை பயன்படுத்தும் ஊசிகள் வைக்கப்பட்டிருந்தமையும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
கடந்த ஜூலை 24ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியசாலை தரப்பினர் மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் மொத்தமாக 520,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
இதேவேளை, காலாவதியான மருந்துகள், இரசாயனங்கள் அல்லது மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட விலையை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்கள் தொடர்பில் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Source: https://samugammedia.com/shock-violations-at-a-private-hospital-in-kegal–52-lakh-fine-1786337001
