Home இலங்கை கைதான கிளிநொச்சி பாடகரை சிறையில் பார்வையிட்ட முன்னணியினர்

கைதான கிளிநொச்சி பாடகரை சிறையில் பார்வையிட்ட முன்னணியினர்

0
image

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

முன்னணியின் சட்டத்தரணியும் கொள்கைபரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் இன்று காலை யாழ். சிறைச்சாலையில் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 

சங்கீதன் தனது விடுதலை தொடர்பாக தாயாருடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட இசை நிகழ்வு இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான குறித்த இளைஞன் பக்தி மற்றும் தென்னிந்தியப் பாடல்கள்  பாடியுள்ளார்.

அதனையடுத்து, தான் இசை நிகழ்வில் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, அதனை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

குறித்த பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தென்னிலங்கையில் பலரும் கடுமையான விமர்சனங்களையும், இனவாத கருத்துக்களையும் முன் வைத்தனர்.

இந்தநிலையில், குறித்த காணொளி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், குறித்த இளைஞன், விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்கிறார் என தெரிவித்து கைது செய்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அதனையடுத்து சாவகச்சேரிப் பொலிஸார் குறித்த  இளைஞனை இன்று(03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://samugammedia.com/frontline-members-visited-the-imprisoned-kilinochchi-singer-1780560979

NO COMMENTS

Exit mobile version