கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அதிகளவில் அடிமையாகி வருவதன் காரணமாக, குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
திறந்த சந்தைப் பொருளாதாரம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், சமூகத்தில் நுகர்வுவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக மக்களிடையே செயற்கையான ஆசைகள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதே இன்று சமூகத்தை இயக்கும் பிரதான காரணியாக மாறியுள்ளதாகவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
சீதுவை பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக, முன்னர் இல்லாத அளவுக்கு மக்களிடையே எல்லையற்ற ஆசைகளும் தேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தையானது மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதற்குப் பதிலாக, செயற்கையாக உருவாக்கப்படும் ஆசைகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே கட்டுப்படுத்தப்படுவதாகவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
