யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கெற்பேலி பகுதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் பலத்த காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 69 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பருத்தித்துறை – கொடிகாமம் பிரதான வீதியின் வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் ஒன்றும் அதற்கு முன்னால் பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியை செலுத்தியவரும், அதில் அமர்ந்து பயணித்த மற்றொருவரும் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களில் துவிச்சக்கர வண்டியில் அமர்ந்து பயணித்த 59 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்துக்களுடன் தொடர்புடைய கெப் மற்றும் காரின் சாரதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
