சாவகச்சேரி நகரசபையின் செயலாளர், சபையை தவறாக வழிநடத்தி நகரசபைக்குச் சொந்தமான வாகனத்தை தனது தினசரி தனிப்பட்ட போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவை தரம் 2 அதிகாரிகள், தமது வீட்டிலிருந்து பணியிடத்திற்குச் செல்வதற்காக தனிப்பட்ட முறையில் அரச வாகனங்களைப் பயன்படுத்த முடியாது எனவும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிர்வாக சேவை அதிகாரிகள் இணைந்து நாளொன்றுக்கு 50 கிலோமீற்றருக்கு உட்பட்ட தூரத்திற்கு அரச வாகனங்களைப் பயன்படுத்த முடியும் எனவும் தாபன விதிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சாவகச்சேரி நகரசபையின் செயலாளர், சபையின் அனுமதி கிடைத்தால் வாகனத்தைப் பயன்படுத்த முடியும் என சபைக்கு அறிவுறுத்தி, அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றச் செய்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த தீர்மானம் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்து, அவரது அனுமதி பெற்ற பின்னரே வாகனத்தைப் பயன்படுத்துமாறு சபை உறுப்பினர்கள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், உறுப்பினர்கள் முன்வைத்த இந்த விடயங்கள் சபைக் கூட்ட அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை எனவும், உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்படாமலேயே நகரசபைக்குச் சொந்தமான முச்சக்கரவண்டி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த வாகனம் சாவகச்சேரி நகரசபை எல்லையைத் தாண்டி, சாவகச்சேரி பிரதேச சபை எல்லையையும் கடந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட உரும்பிராய் வரையில் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு தடவைகள் பயணித்துள்ளதாகவும், இதன்படி நாளொன்றுக்கு சுமார் 80 கிலோமீற்றர் வரை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக கைதடி வரையிலேயே வாகனத்தைப் பயன்படுத்தப் போவதாக சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், உரும்பிராய் வரை வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனப் போக்குவரத்து பதிவேடுகளில் தினமும் இரண்டு தடவைகள் சாவகச்சேரி நகரசபையிலிருந்து உரும்பிராய் சென்று வந்தமை பதிவு செய்யப்படாமல், நகரசபை எல்லைக்குள் பல்வேறு இடங்களுக்கு பயணித்ததாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் தனது அலுவலகக் கடமைகளுக்காக இதுவரை சொந்த வாகனத்தையே பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நகரசபை செயலாளர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தனிப்பட்ட போக்குவரத்துக்காக சபைக்குச் சொந்தமான வாகனத்தைப் பயன்படுத்துகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
