சிறுபோகத்திற்கான உர மானியம் தகுதியுடைய விவசாயிகளில் சுமார் 90 சதவீதமானோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள விவசாயிகளுக்கான உர மானியத் தொகையும் விரைவில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இம்முறை உர மானியத் தொகையை 5,000 ரூபாயால் உயர்த்தியுள்ளது. இதன்படி, முன்னர் ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த உர மானியம் எந்தவித தவணைக் கட்டணங்களும் இன்றி, ஒரே தடவையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
