Home இலங்கை சிறுமி துஷ்பிரயோகம்; அவமானத்தால் தந்தை உயிர்மாய்ப்பு! காத்தான்குடியில் துயரம்

சிறுமி துஷ்பிரயோகம்; அவமானத்தால் தந்தை உயிர்மாய்ப்பு! காத்தான்குடியில் துயரம்

0
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 12 மற்றும் 10 வயதுடைய இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில், பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ள துயரச் சம்பவமும் பதிவாகியுள்ளது.

பொலிஸ் தகவல்களின்படி, குறித்த பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவர், அதே வீதியில் வசிக்கும் 12 வயது சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, அவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, அருகில் இருந்த 10 வயதுடைய மற்றொரு சிறுமியையும் துன்புறுத்த முயற்சி செய்யப்பட்டதாகவும், அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி தொடர்பான தகவலை அவரது தோழியான 10 வயது சிறுமி பாடசாலையில் வெளிப்படுத்தியதையடுத்து, அது ஆசிரியரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து ஆசிரியர், சிறுமியின் தாயாரை  நேற்றுமுன்தினம் அழைத்து சம்பவம் குறித்து அறிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாயார், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த 54 வயதுடைய சந்தேகநபர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விசேட தேவையுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தனது மகளுக்கு நேர்ந்த சம்பவத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக அழுத்தங்களாலும் மனமுடைந்திருந்த 12 வயது சிறுமியின் தந்தை  இரவு  நேற்றுமுன்தினம் உயிர்மாய்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த நபர் முன்னர் ஒரு கொலை வழக்குடன் தொடர்புடையவராக இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தவர் என்பதும் விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/minor-girl-abused-father-dies-from-humiliation-sorrow-in-kaathankudi-1781837443

NO COMMENTS

Exit mobile version