வாடகைக்கு பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து பாணந்துறை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத்துடன், மதுபானக் கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிந்தெல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்டபோது, அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு மதுபானப் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் 8 பைகளில் இருந்து மீட்கப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணைகளின்போது, இந்த மதுபானத் தொகை ஹிரண பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ‘சலா’ என அழைக்கப்படும் மதுபானக் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பாணந்துறை கல்துடே மற்றும் ஹிரண பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பாணந்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தாங்கள் குற்றமற்றவர்கள் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/illegal-liquor-smuggling-in-luxury-car-1787816253
