ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாக வெளியான செய்தி தொடர்பிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், 2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளின் வளாகங்களில் அமைந்துள்ள ஏனைய கட்டடங்களில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகாரபூர்வ தேவைகளுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எவரும் ஜனாதிபதி மாளிகைகளுக்குள் தங்கியிருக்கவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
