Home இலங்கை ஜூலை முதல் பஸ் கட்டணம் உயருமா? தனியார் பஸ் சங்கங்களின் முடிவு

ஜூலை முதல் பஸ் கட்டணம் உயருமா? தனியார் பஸ் சங்கங்களின் முடிவு

0
image

ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கையை தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளன.

இந்தக் கோரிக்கை தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு நேற்று (24) கையளிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த ஐந்து நாட்களுக்குள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, கட்டணத் திருத்தம் குறித்து இறுதி முடிவை எட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட கெமுனு விஜேரத்ன, இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ள எரிபொருள் விலை மாற்றத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து தனியார் பஸ் சங்கங்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே ஜூலை 1ஆம் திகதி முதல் புதிய கட்டணத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு தேவையான அனைத்து செலவுத் தகவல்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள கட்டணத் திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பஸ் கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/will-bus-fares-go-up-from-july-decision-of-private-bus-associations-1782364754

NO COMMENTS

Exit mobile version