பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, அரசாங்கத்தின் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமானதல்ல எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி அதிகாரிகளின் செயலற்ற தன்மை மற்றும் பரந்த கொள்கைத் தோல்விகளே டெங்கு பரவலுக்குக் காரணம் என குற்றம் சாட்டினார்.
கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கும் போதும், குறைந்தபட்சம் பத்து நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பிறகே கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறுவது நிலைமையை மேலும் மோசமாக்குவதாக அவர் தெரிவித்தார்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முழுமையாகத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியதுடன், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய இடவசதி இல்லாமை காரணமாக சிலர் வீட்டிற்கு அனுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உள்ளூராட்சி அமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பின்மை மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு நிலைமையை மேலும் சிக்கலாக்குவதாகவும் நாமல் ராஜபக்ச விமர்சித்தார்.
இதோடு, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும் கருத்து தெரிவித்த அவர், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருந்தும் இலங்கையர்கள் இன்னும் அதிக விலைக்கு எரிபொருள் வாங்க வேண்டிய நிலை தொடர்வதாகவும் அதிருப்தி வெளியிட்டார்.
