டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை பராமரித்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஒரே நாளில் டெங்கு தொடர்பான வழக்குகளுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இதுவாகும் என மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் நளின் கல்தேரா தெரிவித்துள்ளார்.
மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கையின் போது, வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை உருவாக்கியிருந்த பல வீடுகள் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கங்கொடவில நீதவான் நீதிமன்றம் குறித்த அபராதத்தை விதித்துள்ளது.
எதிர்காலத்திலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதால், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருந்து டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நளின் கல்தேரா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
