திருகோணமலை – துளசிபுரம் பகுதியில் உள்ள பிரதான வடிகான்களில் நீண்டநாட்களாக அழுக்குத் தண்ணீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் கடுமையான டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முக்கிய பொது நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அமைந்துள்ள இப்பகுதியில், முறையான நீர் வார்ப்பட வசதிகள் இல்லாததாலும், உரிய பராமரிப்பு இன்மையாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகக் தெரிவிக்கின்றனர்.
மாசுபட்ட இந்த வடிகான் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் குறிப்பாக, சிங்களப் பாடசாலை, சிறுவர் நன்னடத்தை அலுவலகம், கல்வி அபிவிருத்தி முகாமைத்துவ நிலையம், திருகோணமலை மருந்து களஞ்சியப்படுத்தும் நிலையம் ஆகிய பல முக்கிய பொது இடங்கள் அமைந்துள்ளன.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களுக்கு முன்னால் உள்ள வடிகானிலேயே நீண்டகாலமாக தேங்கி நிற்கும் கழிவுநீரால், தினசரி நூற்றுக்கணக்கான மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அப்பகுதியில் வசிக்கும் சில குடியிருப்பாளர்கள் தங்களின் வீட்டுப் பாவனைப் பாழ்நீரை (அழுக்கு நீரை) இந்த வடிகானுக்குள் முறையற்ற வகையில் விடுவதே இந்நிலைக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் மிக தீவிரமாக எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நகரசபை , சுகாதார அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, இந்த வடிகான்களைச் சுத்திகரிப்பதற்கும், கழிவுநீரை முறையாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துளசிபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
