Home இலங்கை டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்: அரசின் முக்கிய விளக்கம்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்: அரசின் முக்கிய விளக்கம்

0
image

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சங்களுக்கு மத்தியில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ விளக்கம் அளித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது காணப்படும் டொலர் மதிப்பு உயர்வு அல்லது ரூபாயின் பெறுமதி குறைவு என்பது பொருளாதார நெருக்கடியின் அறிகுறி அல்ல என்று வலியுறுத்தியுள்ளார். 

மாறாக, மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலையால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தாக்கங்களின் ஒரு பகுதியாகவே இதனை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சூழ்நிலையால் இலங்கை பொருளாதாரத்தில் சில தற்காலிக அதிர்வுகள் ஏற்பட்டுள்ள போதிலும், அவற்றை சமாளிக்க தேவையான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் உருவாகும் ஊக வணிக நடவடிக்கைகள் மற்றும் தேவையற்ற அச்சம் காரணமாக டொலரின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், அண்மையில் 350 ரூபாயை தாண்டிய டொலர் மதிப்பு அரசின் நடவடிக்கைகளால் 330 ரூபாய் வரை குறைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு நாட்களில் மீண்டும் சிறிய உயர்வு ஏற்பட்டிருந்தாலும், இந்த நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என்றும், இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அல்லது வெளிநாட்டு நிதி நெருக்கடியைக் குறிக்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

எனவே, தற்போதைய டொலர் மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் தொடர்பில் மக்கள் தேவையற்ற பதற்றம் அடையாமல், அரசின் பொருளாதார நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source: https://samugammedia.com/dont-be-nervous-about-the-dollars-rise-governments-key-explanation-1780712246

NO COMMENTS

Exit mobile version