Home இலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி – வீட்டிலிருந்தே பெறலாம்!

தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி – வீட்டிலிருந்தே பெறலாம்!

0
image

தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த ரயில் பருவகாலச் சீட்டுகளை (Season Tickets) இணையவழியில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, seatreservation.railway.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக தனியார் துறை ஊழியர்களும் மாதாந்த பருவகாலச் சீட்டுகளுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவரை அரச துறை ஊழியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த இணையவழி பருவகாலச் சீட்டு வசதி, தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பருவகாலச் சீட்டுகளைப் பெறுவதற்காக பயணிகள் அடிக்கடி ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை நீங்குவதுடன், வீட்டில் இருந்தவாறே இணையவழியில் விண்ணப்பித்து சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விரிவாக்கப்பட்ட சேவையின் உத்தியோகபூர்வ தொடக்க விழா இன்று (08) பத்தரமுல்லையில் உள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ விருந்தகத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

தற்போதைய நடைமுறையின் கீழ், பருவகாலச் சீட்டைப் பெற விரும்பும் பயணிகள் விண்ணப்பப் படிவம், நிழற்படம், வசிப்பிடச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முதலில் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், மாதந்தோறும் குறிப்பிட்ட 10 நாட்களுக்குள், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான குறுகிய காலப்பகுதியில் மாதாந்த பருவகாலச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் காணப்பட்டது.

எனினும், புதிய டிஜிட்டல் முறையின் ஊடாக பயணிகள் தங்களது கணக்கையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்திய பின்னர், வீட்டிலிருந்தே பருவகாலச் சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன், ஆசன முன்பதிவு வசதி கொண்ட எந்தவொரு ரயில் நிலையத்திலும் பயணிகள் தங்களது கணக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான சலுகை அடிப்படையிலான இணையவழி பருவகாலச் சீட்டு விநியோக சேவை கடந்த ஜூன் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/online-train-seasonal-ticket-facility-now-available-for-private-sector-employees-too–can-be-booked-from-home-1788860025

NO COMMENTS

Exit mobile version