தலவாக்கலை நுவரெலியா இடையே தினசரி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (10) நானுஓயா – ரதெல்லை குறுக்கு பாதையில் பேருந்துகளை நிறுத்தி, மத்திய மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாதையில் தினமும் 14 பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும், ரதெல்லை குறுக்கு பாதையில் இயக்கப்படும் ஹட்டன் – நுவரெலியா சொகுசுப் பேருந்துகள் காரணமாக தலவாக்கலை – கிரிமெட்டியா வழியாக சுற்றுப்பாதையில் பயணிக்கும் பேருந்துகள் கடுமையான அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலைமையால் தங்களது பேருந்து தொழிலை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு வழங்குமாறு மத்திய மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடம் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினர்.
மேலும், பாதையில் இயங்கும் பேருந்துகளில் GPS தொழில்நுட்பம் பொருத்தப்படாத பேருந்துகளின் பயணிகள் அனுமதிப் பத்திரங்களை அதிகாரசபை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, ஹட்டன் நுவரெலியா ரதெல்லை குறுக்கு பாதையில் இயங்கும் சொகுசுப் பேருந்துகளுக்கு GPS கருவி பொருத்த ரூ.11,000 செலவாகும் நிலையில், தலவாக்கலை கிரிமெட்டியா வழியாக சுற்றுப்பாதையில் இயங்கும் பேருந்துகளுக்கு ரூ.17,500 செலுத்துமாறு அதிகாரசபை அழுத்தம் கொடுக்கின்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஒரு நாளுக்கு 48 கிலோமீட்டர் தூரம் மட்டுமே ஒரு பயணச் சுற்றாக இயக்கி பேருந்து தொழிலை நடத்த முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தாங்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டால், GPS தொழில்நுட்பத்தை தங்களது பேருந்துகளில் பொருத்துவதில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக மத்திய மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் உயர் அதிகாரியிடம் கருத்து கேட்க முயற்சிக்கப்பட்ட போதிலும், அது வெற்றியளிக்கவில்லை.
