Home இலங்கை தமிழருக்குரிய எந்த விடயத்தையும் அரசு தொட்டுக்கூடப் பார்க்கவில்லை தமிழரசின் பொதுச்செயலர் சுமந்திரன் பகிரங்கக் குற்றச்சாட்டு

தமிழருக்குரிய எந்த விடயத்தையும் அரசு தொட்டுக்கூடப் பார்க்கவில்லை தமிழரசின் பொதுச்செயலர் சுமந்திரன் பகிரங்கக் குற்றச்சாட்டு

0
image

ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கத் துளியளவும் முன்வரவில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக விமர்சித்தார்.

சாவகச்சேரியில் நேற்று நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டை ஆட்சி செய்பவர்கள் அதிகாரங்கள் பகிரப்பட்டதாகக் கூறினாலும், மாகாண சபைகள் அற்ப சொற்ப அதிகாரங்களோடு இயங்காமல் கிடக்கின்றன. மத்திய அரசுக்கு இல்லாத அதிகாரங்களையும் தன் முகவர்கள் மூலம் ஒன்பது மாகாணங்களிலும் நிறைவேற்றும் முழுச் சர்வாதிகார நிறைவேற்று அதிகாரியாகவே தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றார்.

இந்த அரசு ஊழல், லஞ்சம், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகத் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். இதற்கு முன்னர் மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளைப் போலன்றி, இரு தரப்புக்கும் எதிராக அவர்கள் எந்தவித சமரசமுமின்றி நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக அவ்வளவு மும்முரமாகச் செயற்படும் இந்த அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு விடயத்தையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

எங்களது வாழ்வாதாரத்துக்கு அத்திவாரமான நிலங்களை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, ஏற்கனவே 2024ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் காணிகளையும், ஏற்கனவே திறக்கப்பட்ட பலாலி வீதியையுமே மீளவும் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். வடக்கில் இதுவரை ஓர் அங்குல நிலம் கூட புதிதாக விடுவிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சியில் இருந்தபோது எங்களுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வாய் கிழியக் கத்தியவர்கள், இப்போது ஜனாதிபதியாகிவிட்டு இராணுவத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று கூறுகின்றார்கள்.

அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள முதலாவது வாக்குறுதியான புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பௌத்த மதபீடங்களின் எதிர்ப்பையும் மீறி அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவரும் துணிவைக் காட்டும் அரசு, அதிகாரப் பகிர்வு குறித்துச் சிந்திப்பதில்லை. எல்லாவற்றையும் தங்களுடைய கைக்குள்ளே கொண்டு வந்து ஒரு கட்சி ஆட்சியாக மாற்றும் நடவடிக்கைகள்தான் நடக்கின்றன. எனவே, இவற்றை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Source: https://samugammedia.com/the-government-has-not-even-touched-upon-any-issue-concerning-the-tamils-public-accusation-by-sumanthiran-general-secretary-of-the-tamil-party-1789282130

NO COMMENTS

Exit mobile version