Home இலங்கை தமிழீழத்தை எதிர்க்கும் அர்ச்சுனாவை எங்கள் மேடைகளில் வைத்திருப்பது அவசியம்! – உதய கம்மன்பில அதிரடி

தமிழீழத்தை எதிர்க்கும் அர்ச்சுனாவை எங்கள் மேடைகளில் வைத்திருப்பது அவசியம்! – உதய கம்மன்பில அதிரடி

0
image

தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தங்களது அரசியல் மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தான் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்த போதிலும், தமிழீழம் உருவாக்கப்படுவதை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்ததாக உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அர்ச்சுனா தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்போது தங்களது அரசியல் மேடையில் ஏறி, ஒருபோதும் தமிழீழக் கோரிக்கையை முன்வைக்கப் போவதில்லை என்றும், மக்களின் ஒற்றுமையே முக்கியம் என்றும் கூறும்போது, அவரை ஆதரிக்க வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இவ்வாறான எண்ணம் கொண்ட அரசியல்வாதிகளை தொடர்ந்து தங்களது அரசியல் மேடைகளில் வைத்திருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/its-necessary-to-have-arjuna-who-opposes-tamil-eelam-on-our-stages–udhaya-kammanbils-blast-1789619207

NO COMMENTS

Exit mobile version